26.1.11

சிங்கள பேரினவாதம் தலை தூக்குகிறதா?
மீண்டும் ஹபாயா பிரச்சினை.
RASMIN M.I.Sc

கடந்த 20 வருடங்களான இலங்கையை பயத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்த யுத்த பீதி இறைவனின் மிகப் பெரும் கருணையினால் தற்போது இல்லாமல் ஆகியிருக்கிறது.

இறைவனின் உதவியினால் ஆளும் சுதந்திர முன்னனியின் தலைவர் அவா்கள் முன்னெடுத்த செயல்பாடுகள் யுத்த பயத்தை விட்டும் நிம்மதியாக மக்களை வாழ வைத்திருக்கிறது.

சண்டை ஓய்ந்துள்ள இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் இனவாத சிந்தனை பிறப்பெடுக்கிறதோ என்ற அச்சம் சிறுபான்மை மக்களின் மனங்களை ஆற்கொண்டுள்ளது.

சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்களை,பெரும்பான்மை சமுதாயத்தை சோ்ந்தவா்கள் அடிக்கடி சீண்டிப் பார்ப்பது அதனை மேலும் உறுதி செய்கிறது.

ஹபாயாவிற்கு தடையா?

இந்நிலையில் இலங்கையின் கொழும்பில் உள்ள ஒரு கல்லூரிக்கு இஸ்லாம் பாடம் கற்பிப்பதற்காக மத்திய மாகாணத்தை சேந்த முஸ்லீம் ஆசிரியர் ஒருவா்  இடமாற்றம் பெற்று வந்தார் அவரை பெரும்பான்மை இனத்தை சேர்ந்த கல்லூரியின் அதிபர் ஹபாயா அணிந்து வந்தால் கல்லூரிக்கு வரவேண்டாம் என்றும் சேலை அணிந்து கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்றும் தடை விதித்துள்ளார்.

சுமார் 600 க்கும் அதிகமான முஸ்லிம் மாணவிகள் பயிலும் இப்பாடசாலையில் தரம்  1 - 11 வரை சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கற்பித்தல் நடை பெறுகின்றது. தமிழ் மொழி மூலம் போதிக்கப்படும் தரம் 1, 2 ஆகிய வகுப்பக்களில்  தற்போது ஒரே ஒரு ஆசிரியையே கல்வி போதிப் பதுடன் ஏனைய வகுப்புக்களில் இஸ்லாம் பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர் எவரும் இல்லாத நிலையில் ஆரம்பக் கல்வி கற்பித்தலில் தேற்சி பெற்ற  இந்த ஆசிரியைக்கு மேல் மாகாணக் கல்விப் பணிப்பாளர்  இப்பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கியுள்ளார்.

பதவியேற்பதற்கு முன்னர் பாடசாலையைப் பார்வையிடச் சென்ற ஆசிரியை அன்றைய தினம்  அதிபர் கல்லூரியில் இல்லாத நிலையில் தமிழ்ப் பிரிவுப் பொறுப்பாசிரியையிடம் தனது இடமாற்றம் பற்றித் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் கறுப்பு நிற பாயா (மேலங்கி) அணியாமல் மாற்று நிறங்களில் அணிந்து வறுமாறு கூறியுள்ளார். 

அதற்கேற்ப அதிக பணச் செலவில் வேறுநிறங்களில் பாயாவைத் தைத்து அணிந்து, கடந்த வாரம் கடமை ஏற்கச் சென்ற ஆசிரியைக்கு `இப்பாடசாலையில் ஹபாயா அணிய அனுமதி வழங்கப்படுவதில்லை' என்றும், இந்தப் கல்லூரியில் கற்பிக்க விரும்பினால், சேலை உடுத்து வேண்டுமானால் தலையை மாத்திரம் மறைத்து வருமாறும்  அதற்கு சம்மதிக்க முடியாதிருப்பின் வேறு கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண கல்விப் பணிப்பாளரிடமும்மேல்மாகாண ஆளுநர்  அலவி மவ்லானாவிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாசிரியைக்கு மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் வேறு முஸ்லிம் பாடசாலை ஒன்றுக்கு உடன் இடமாற்றம் வழங்கியுள்ளார். 

இதேவேளை 600 க்கும் அதிகமான முஸ்லிம் மாணவிகளைக் கொண்ட இப்பாடசாலையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகளுக்கு கட்டாய  பாடங்களில் ஒன்றான  இஸ்லாம் பாடத்தைக் கற்பிப்பதற்கு முஸ்லிம் ஆசிரியர் எவரும் இதுவரை நியமிக்கப்படாததனால் கத்தோலிக்க அல்லது இந்து சமய பாடத்தைக் கற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மேல் மாகாண ஆளுனர் அலவி மவ்லானா ஜனாதிபதி அவா்கள் தற்போது அமெரிக்காவிற்கு சென்றிருப்பதினால் அவா் இலங்கை திரும்பியவுடன் இது தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிட இருப்பதாக தெரிவித்தார்.

ஆசிரியர்களின் ஆடை தொடர்பாக சட்டம் உள்ளதா?

இலங்கை நாட்டில் கல்லூரிகளில் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியர்கள் இந்த ஆடையைத் தான் அணிய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.

நிலைமை இவ்வாறிருக்க பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே சிறுபான்மை மக்களின் உரிமைகளில் கை வைப்பது நாட்டின் நலனையும்,சமுதாய ஒற்றுமையையும் கேள்விக்குள்ளாக்கும் ஒரு செயல் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு முன்பும் பல தடவைகள் முஸ்லீம் மாணவிகள் அவா்களின் ஆடை தொடர்பாக பெரும்பான்மை ஆசிரிய,ஆசிரியைகளினால் பல இன்னல்களை சந்தித்திருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

இலங்கை மக்கள் அனைவரும் சமமானவர்கள் பிரிவினை காட்டப் படக்கூடாது என்று அடிக்கடி மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் ஜனாதிபதி அவா்கள் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் அவசரமாக கவணம் எடுக்க வேண்டும் என வழியுறுத்துகிறோம்.

ஓரளவு அச்சத்தாலும்,பசியாலும்,செல்வங்கள்,உயிர்கள்,மற்றும் பலன்களை சேதப்படுத்தியும் உங்களை சோதிப்போம்.பொருத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவா்கள் கூறுவார்கள்.

அவா்களுக்கே தமது இறைவனின் அருள்களும்,அன்பும் உள்ளன.அவா்களே நேர்வழி பெற்றோர். (2 - 155,156,157) 

செய்திகள்