17.12.11

ஹராத்தை ஹலாலாக்கும் ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!




அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது…
ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!

ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் மார்க்க வல்லுனர்களிள் சபை தொடர்பாக பல சர்ச்சைகள் சமூகத்தில் எழுந்து வருகின்றன. அண்மைக்காலமாக அது வழங்கி வரும் மார்க்கத் தீர்ப்பு ஹராத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக ஹராத்தை இலகுவாக்கக் கூடிய, ஹராத்தை நெருங்கக் கூடிய ஒரு சூழ்நிலையை தோற்றுவித்திருக்கிறது.

இது வழங்கும் ஹலால் பத்வா ஹராம் பற்றிய அச்சத்தை சமூகத்தில் குறைத்து வருகிறது.

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற இந்தப் பிரச்சினைப்பற்றி பேசுவதற்கு முன் சமகால உலக அரசியல் பற்றியும், அதன் பாதிப்பாய் உருவெடுத்திருக்கும் ஜம்இய்யதுல் உலமா சபையின் பத்வா வழங்கல் நிலைப்பாடு பற்றியும் தெளிவு பெறுவது அவசியமாகும்.

உலக மயமாக்கல் உலமா சபையை எப்படி மாற்றியிருக்கிறது பாதித்திருக்கிறது என்று பார்ப்பது அவசியமாகும்.

அமெரிக்கா ஏகாதிபத்தியம் அபாயகரமாக உலகமயமாக்களோடு எல்லா நாடுகளையும், எல்லா சமூகங்களையும் கலாசார, அரசியல் ரீதியாக அழித்து வருகின்றது

அமெரிக்கா பலம் பொருந்திய தனது இராணுவ கட்டமைப்பின் மூலம் தனக்கு தேவையான நாடுகளை ஆக்கிரமிக்கிறது. அறிவியலில் தன்னோடு போட்டிபோடும் நாடுகளை அது அச்சுறுத்துகின்றது.

மனிதநேயமற்ற அதன் இராணுவ ஆக்கிரமிப்பு மிகவும் பயங்கரமானது. அதன் கலாசார ரீதியிலான ஆக்கிரமிப்பு மிகவும் பலமானது. ஏனைய நாடுகள் மீதான இந்த கலாசார ஆக்கிரமிப்பு நாகரீகம் என்ற போர்வையில் புகுந்து நாசத்தை விளைவிக்கிறது.
அது நாடுகளின் சமூக, கலாசாசார ரீதியிலான அடையாளங்களுக்கு கல்லறை சமைக்கிறது.

பூகோள ரீதியில் ஈரம் காயாத இரத்த வரலாறொன்றை அதன் ஈராணுவ கலாசார பலம் பதித்து வருகிறது.

அமெரிக்காவின் இராணுவ, மற்றும் கலாசார ரீதியிலான இரண்டு ஆக்கிரமிப்புகளும் சுரண்டல் சூறையாடல் என்ற முதலாளித்துவத்தின் தாரக மந்திரத்தில் தடம் பதித்தவையே!

அமெரிக்காவிற்கு அதிக இலாபத்தை இந்த இரண்டு ஆக்கிரமிப்புகளும் ஈட்டிக் கொடுக்கின்றன. மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளை அடிமைப்படுத்தி எண்ணெய் வளங்களை அது கொள்ளையடிக்கின்றது.

அரபு நாடுகளில் வேகமாய் பரவும் அமெரிக்க கலாசாரம் அந்த நாட்டை இஸ்லாத்தின் உயிரோட்டத்திலிருந்து துரத்தி தூரமாக்கி வருகிறது.

அமெரிக்க கலாசாரத்தின் ஆரம்ப அடையாளமே யூத தயாரிப்பான ‘‘கொக்கா கோலா”, ‘‘பெப்ஸி கோலா”. அவை அரபுகளின் அன்றாட உணவில் முக்கிய பாத்திரங்கள்.

‘‘கோலா’’க்கள் குடிக்காமல் அரபுகளின் குரல்வளைக்குக் கீழ் உணவே இறங்காது. நாசகாரர்களின் தயாரிப்போடு அரபுகளுக்கு நேசம் அதிகம்!

மேற்குலகின் கலாசாரம் முழு உலகும் பரவ வேண்டும். அசிங்கமான கலாசாரத்தில் முழு உலகையும் திணிக்கவேண்டும் ஏன்ற தந்திரத்தால் தனது கலாசாரத்தை வர்த்தக மயமாக்கி உலகை ஆக்கிரமித்து வருகிறது அந்த ஏகாதிபத்தியம்.

இன்று வாழ்க்கையின் சகல துறைகளிலும் பாதிப்பு செலுத்தும் ஒரு பயங்கரமாக அதன் ஆக்கிரமிப்பு உள்ளது. உலமா சபையின் செயற்பாடுகளுக்கும் உலகை ஆக்கிரமிக்கும் இந்த கலாசார ஆதிக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் இப்போது யோசிக்கலாம்.

இது மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் போடும் ஒரு முடிச்சா என்று கூட நீங்கள் முணுமுணுக்கலாம்.
எதிர்காலத்தை இருள்மயமாக மாற்றும் ஒரு சர்வதேச சதியை, அச்சாணியாய் வைத்து இந்த முஸ்லிம் உம்மத் சுழன்றுக்கொண்டிருக்கிறது என்பதை சொல்லி வைக்கத்தான் அப்படி ஒரு சுற்று சுற்றி வந்தேன்.
தேசம், சர்வதேசம் என்ற எல்லைகளைத் தாண்டி முழு முஸ்லிம் உம்மத்தும் அமெரிக்க சதியின் வட்டத்தை வலம் வந்துக்கொண்டிருக்கின்றது.
காட்டாறு போல வரும் கலாசார அக்கிரமிப்பை கண்மூடித்தனமாய் பின்பற்றிவரும் இந்த உம்மத்தின் நிலையும், அந்தக் கலாசாரத்திற்கு பச்சைக் கொடி காட்டி பத்வா வழங்கும் இந்த உலமா சபையின் செயற்பாடும் மோசமான எதிர்காலமொன்றுக்கான முன்னுதாரணமாகும்.
அமெரிக்கக் கலாசாரத்தை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் உம்மத்துள் உருவாகியிருக்கும் எதிர்விளைவுகளையும் இனிபார்ப்போம்…
பெற்றோல் பாலைவன பூமியில் உற்பத்தியாகி உலகையே இயக்கி, உயிரை வழங்கிக்கொண்டிருக்கிறது . அந்த உயரிய வளத்தை மிக குறைந்த விலைக்கு அமெரிக்காவிற்கு விற்று விட்டு, அமெரிக்க தயாரிப்பான கோலாவை அதிக விலைக்கு அரபு நாடுகள் வாங்குகின்றன.
அமெரிக்காவிற்கு விற்பனையாகும் ஒரு லீற்றர் பெற்றொலின் விலை வெறுமனே 24 (இருபத்து நான்கு) ரூபாய். அமெரிக்க தயாரிப்பான (இரசாயண தண்ணீர்க் கலவையான) ஒரு லீற்றர் கொக்கா, பெப்ஸி கோலாவை அரபு நாடுகள் நூற்று முப்பது ரூபாயை கொடுத்து வாங்குகிறது. குடித்து மகிழ்கிறது.

தன்னிடமுள்ள வளத்தின் பெறுமதியை அளவிட தெரியாத அளவிற்கு உலக மாயையில் மயங்கி மந்தப் புத்தியில் மடிந்து கிடக்கிறது இந்த அரபு சமூகம். அரபு சமூகம் அறிவியல் ரீதியாக வங்குரோத்து நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு எப்படி ஒரு நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கின்றதோ அதே போல அதன் கலாசார ஆக்கிரமிப்பு முழு உலகையும் கொள்ளையடிக்கின்றது.
இதனை தெளிவு படுத்தத்தான் இந்த உதாரணத்தை இங்கு முன்வைத்தேன். நான் வைத்த கோலா, பெற்றோல் விலையில் சிலவேளை சின்ன மாற்றங்கள் இருக்கலாம்.
இன்று அமெரிக்க கலாசாரத்திற்கு அடிமைப்பட்ட அரபுகளை விட, ஈமானிய உணர்வுகளை பாதுகாத்து வாழ்கின்ற மக்கள் அரபு அல்லாத ஏனைய நாடுகளில்தான் அதிகம் வாழ்கின்றார்கள்.
அந்த நாடுகளை இந்த அமெரிக்க கலாசாரம் எப்படி ஆதிக்கம் செலுத்தப் போகிறது. ஆதற்கான ஒரு புதிய வழிதான் அமெரிக்க பொருட்களுக்கு ஷரீஆ அங்கீகாரம்.
அதாவது ஹலால் அங்கீகாரம்.
ஆந்த அங்கீகாரத்தைப் பெற உலமா சபைக்கு இப்போது பல லட்சம் ரூபாய்களை அள்ளி வழங்க பார்த்துக்கொண்டிருக்கின்றன பல்தேசிய நிறுவனங்கள்.
பத்வா என்ற போர்வையில் அசிங்கமான அமெரிக்க கலாசாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
உலமாசபை கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்க உணவு நிறுவனங்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பத்வா வழங்குகிறது.
மனிதனுக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகளை உருவாக்கும் அமெரிக்க பாஸ்ட் பூட் உணவு முறை அந்த நாட்டிலேயே பல சமூகவியல் பிரச்சினைகளை தோற்றுவித் திருக்கிறது.
(அமெரிக்க சனத்தொகையில் மூன்றில் ஒரு வீதத்தினர் அவர;களின் உணவு பழக்கங்களால் உடல் எடை அதிகரிப்பு போன்ற உடலியல் ரீதியிலான நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.)
அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் இந்த அமெரிக்க உணவு விடுதிகளை நோக்கி படையெடுப்பது அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக உலமா சபையின் ஹலால் பத்வாவை குறிப்பிடலாம். உலமா சபையின் பத்வாவை பெற்றுக்கொண்ட இந்த நிறுவனங்கள் ஊடகங்களில் உலமா சபையின் ஹலாலை முன்னிலைப்படுத்தி விளம்பரங்கள் செய்கின்றன.
முஸ்லிம்களை அமெரிக்க உணவுப் பழக்கத்திற்கு திசை திருப்ப உலமா சபையின் பத்வா(?) இன்று பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவே திட்டமிட்டு வடிவமைத்த செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக களமிறங்கிய அது இஸ்லாத்திற்கெதிராக வெளிப்படையாகவே செயலாற்றியது.
இதனால் உலக முஸ்லிம்களின் மனங்களில் அமெரிக்க எதிர்ப்பு வளர்ந்தது.
அப்படி எழுந்த அமெரிக்க எதிர்ப்பு அலைகளும், ஆப்கானில், பலஸ்தீனில், ஈராக்கில், லெபனானில் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் கொலைகளும், அநியாயங்களும் உலகளாவிய ரீதியில் எதிர்நிலையைத் தொற்றுவித்தது.
அமெரிக்க பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றது. சர்வதேச ரீதியாக முஸ்லிம் அறிஞர்கள் அமெரிக்க, இஸ்ரேலிய பொருட்களை பாவிப்பது ஹராம் என்று கூட பத்வா வெளியிட்டார்கள்.
அதனால் அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டது. இலங்கையில் கூட அமெரிக்க, இஸ்ரேலிய பொருட்கள் பகிஷ்கரிக்கப்பட்டன. இன்றும் பகிஷ்கரிக்கப்படுகின்றன.

அமெரிக்க பொருட்களுக்கு சந்தையில் ஏற்பட்ட பின்னடைவை சரி செய்யவே ஹலால் பத்வா சூழ்ச்சி சந்திக்கு வந்தது.
இலங்கையில் ஜம்இய்யதுல் உலமா சபை இதனை ஒழுங்காக நிறைவேற்றும் ஊழியனுக்குரிய கதாபாத்திரத்தைப் பெற்றும் கொண்டது.
அமெரிக்க பொருளாதாரத்தோடு உயிராக இருக்கும் வட்டி தொடர்பான முஸ்லிம்களுக்குள்ள முரண்பாட்டை முடக்க வேண்டிய தேவையை உணர்ந்த இந்த இஸ்லாத்தின் எதிர்சக்திகள், போலி இஸ்லாமிய வங்கிகளின் உருவாக்கத்திற்கு முஸ்லிம்களை உட்சாகப்படுத்த சதித் திட்டம் போட்டன.
இந்த சதியின் செயல் வடிவத்திற்கு உயிரூட்டியது உலமா சபை.

வட்டியை விட்டு தூரமாகியிருந்த முஸ்லிம்களை வேட்டையாட அதே வட்டி நிறுவனங்கள் ஒரு புதிய திட்டம் வகுத்தன. உலமா சபையின் ஹலால் பத்வா, இஸ்லாமிய வங்கி என்ற ஒரு புதிய சொல்லை அறிமுகம் செய்தது. வட்டியில் வாழ்ந்த வங்கிகள் திடீரென்று ஹலால் வங்கிகளை குட்டிகளாய் இட்டன.
காலகாலமாய் வட்டியில் குட்டி போட்ட இந்த வங்கிகள் இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் போட்ட புதிய குட்டிக்கு உலமா சபையே “இஸ்லாமிய ஹலால் வங்கி ” என்று பெயர் சூட்டியது. பத்வாவின் மூலம் அங்கீகாரம் வழங்கியது.
ஏகாதிபத்தியத்தின் தேவைக்காக ஹராத்தை ஹலாலாக மாற்றும் இந்த வேலைத்திட்டம்; முஸ்லிம்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது.

சிலிங்கோ புரொபிட் செயாரிங் என்ற நிதி நிறுவனத்திற்கு உலமா சபை ஹலால் பத்வாவை வழங்கியது. உலமா சபையின் பத்வாவை நம்பி பணத்தை வைப்பிலிட்ட பதினாறாயிரம் முஸ்லிம்களின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது.
முஸ்லிம்களின் பணம் 1400 கோடி ரூபாய்களை இந்த நிதிநிறுவனம் மோசடி செய்துள்ளது. இவர்கள் பணத்தை இழந்து இன்று நிர்க்கதியற்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள். உலமா சபையின் கண்மூடித்தனமான பத்வா முஸ்லிம்களை கஷ்டத்தில் வீழ்த்தியிருக்கிறது.

அது மட்டுமில்லாமல் இந்த இஸ்லாமிய(?) வங்கியில் பல ஆயிரம் ரூபாய்களை “ஆலோசனை வழங்குகிறோம்” என்ற போர்வையில் ஆலோசகர;களாக சேவையாற்றிய உலமா சபை அங்கத்தவர்கள் மாதாந்த ஊதியமாக பெற்றிருக்கின்றார்கள். உலமா சபை அங்கத்தவர்கள் பலர் அந்த வங்கியிடமிருந்து பல லட்சம் ரூபாய்களைக் கடனாக பெற்றும் இருக்கின்றார்கள். பெற்ற கடனை இன்று வரை அடைக்காமல் இருப்பதாக அந்த நிறுவனம் குற்றம் சாடடி இருக்கின்றது. இந்த செய்தி பல தேசிய பத்திரிகைகளிலும்; வெளிவந்திருக் கின்றன..

உலமா சபையின் பத்வா அங்கீகாரத்தை ஏற்றே முஸ்லிம்கள் 1400 கோடி ரூபாய்களை இந்த வங்கியில் வைப்பிலிட்டனர். இப்போது முஸ்லிம்களின் இந்த பணத்தை வங்கி ஏப்பமிட்டுவிட்டது.
உலமா சபை அதற்கு பொறுப்பு நிற்காமல் இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்காமல் தூர நழுவி வருகின்றது.
“நாங்கள் பத்வா வழங்கியது உண்மை. ஆனால் இப்போது நாங்கள் அந்த வங்கியிலிருந்து விலகி விட்டோம் அதற்கும் எங்களுக்கும் இப்போது எந்த தொடர்புமில்லை ”
என்று சிறுபிள்ளைத்தனமாக சொல்கிறது இந்த உலமா சபை. அறிவீனமாக அறிக்கை விட்டு முஸ்லிம்கள் மத்தியில் அவமானப்பட்டு நிற்கின்றது.


உலமா சபையால் ஹலால் பத்வா வழங்கி ஆசிர்வதிக்கப்பட்ட சிலிங்கோ புரொபிட் செயாரிங் நிறுவனம் முஸ்லிம்களிடம் இருந்து பெற்ற பணத்தை இரவு கேளிக்கை விடுதிகளுக்கும் முதலீடு செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இஸ்லாத்திற்கு முரணான வியாபாரங்களுக்கும் முதலீடு செய்திருக்கின்றது. இதை ஜம்இய்யதுல் உலமா கண்டு கொள்ளாமல் இரந்திருக்கிறது.
இந்த இரகசியத்தை அறிந்த பணத்தை வைப்பிலிட்ட முஸ்லிம்கள் இன்று வேதனையடைகின்றனர். அவர்கள் பணம் இழந்தது மட்டுமல்லாமல் அவர்களின் பணம் இஸ்லாம் தடை செய்த வியாபாரங்களுக்கு மூலதனமாகியிருக்கிறது.

இந்தப் பாவத்திற்கும் உலமா சபையே பதில் சொல்ல வேண்டும்.
சமூகத்தில் தலைமைத்துவம் வகித்து செய்ய வேண்டிய கடமைகள் அனேகம் உலமா சபைக்கு இருக்கின்றன.
கல்வி, பொருளாதார ரிதியில் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றனர்.. பாடசாலை தொடர்பான, வளப்பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றன.
அவற்றையெல்லாம் மறந்து விட்டு பணத்தை மையப்படுத்திய வங்கி, வர்த்தகம் தொடர்பான பணம் சம்பாதிக்கும் ஹலால் பத்வா செயற்திட்டங்களுக்கே அது முன்னுரிமை வழங்கியது.

அது மட்டுமல்லாமல் இந்த மோசமான கலாசார ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் கட்டுண்டு போன உலமா சபை, அமெரிக்க, யூத பல்தேசிய நிறுவனங்களுக்கும் இஸ்லாம் தடை செய்த ஹராமான இறைச்சி உணவுவகைகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் ஹலால் பத்வாவை வழங்கி பெரும் தொகையான பணத்தை பகரமாக பெற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்க, மாற்று மத வட்டி, உணவு நிறுவனங்களுக்கு பத்வா வழங்க அவசரமும், அவசியமும் உலமா சபைக்கு ஏன் ஏற்பட்டது? இந்த புதிய உணவு கலாசாரத்தை முஸ்லிம்கள் மீது திணிக்க காரணம் என்ன? முஸ்லிம்களுக்கு உண்பதற்கு இவற்றை தவிர வேறு உணவேயில்லை என்றிருந்தால் உலமா சபை உடனே முன் வந்து இந்த உணவை உண்ணுங்கள் என்று ஹலால் பத்வாவை வழங்குவதில் பிழையே இல்லை.
மேற்படி யூத, கிறிஸ்தவ கம்பனிகளிடமிருந்து பணம் அறவிட்டு பத்வா வழங்கியதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்திற்கு மிக மோசமான வழிகாட்டலை உலமா சபை வழங்கியிருக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டு உலமா சபைக்கு எதிராக சமூகத்தில் பரவலாக எழுந்தும் வருகிறது.
கண்ட கண்ட பொருட்களுக்கெல்லாம் பணத்தை வாங்கிக்கொண்டு பத்வா வழங்கும் வியாபாரத் தனத்தில் இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை இயங்கி வந்ததன் விபரீதத்தை இன்று சமூகம் நன்றாக அனுபவித்துக்கொண்டிருகின்றது.
அமெரிக்க கலாசார, அரசியல் சதி ஒன்றுக்கு உலமா சபை துணை போனதால் அவர்களுக்கல்ல மக்களுக்குத்தான் தண்டனை கிடைத்தது.
கடந்த ரமழான் மாதம் பிஸ்ஸா உணவு நிறுவனம் ஒன்று கொக்கா கோலா பெரிய போத்தல் ஒன்றுடன் பிஸ்ஸா ஒன்றுக்கான விளம்பரத்தை செய்திருந்தது. கொக்கா கோலா போத்தலோடு உலமா சபையின் இலட்சினை பொறிக்கப்பட்ட பிரசுரத்தை கொழும்பில் வீடு வீடாக அந்த நிறுவனம் பகிர்ந்து அளித்தது. பிஸ்ஸாவிற்கு கொடுத்த ஹலால் பத்வா மறைமுகமாக கோலாவிற்கும் பயன்படுத்தப்பட்டது.

யூத சக்திகளின் கோலாவை குடிப்பதுவும், பலஸ்தீன, ஈராக்கிய முஸ்லிம்களின் இரத்தத்தைக் குடிப்பதுவும் சமமான செயல் என்பதை உலமா சபை நன்கு உணர்ந்திருக்கிறது. என்றாலும் பணத்தை மையமாக வைத்து செயற்படுவதால் அதன் சாதக, பாதகங்களை சரியாக இனம் காண முடியாமல் இப்போது திண்டாடி நிற்கிறது.

திறந்த பொருளாதாரம் பணத்திற்கு பின்னால் ஓடக்கூடிய ஒரு சமுதாயத்தை தோற்றுவித்தது உண்மைதான்.
உலமா சபை அப்படி ஓடுவதை முஸ்லிம்களால் அங்கிகரிக்க முடியாது. பணத்திற்கு முன்னால் அல்லாஹ்வின் தீனை பகடைக் காய் ஆக்க அனுமதிக்க முடியாது. பத்வாவை விற்று பணம் சம்பாதிக்க இஸ்லாத்தில் இடமே கிடையாது.

பத்வா ஒரு வியாபார பண்டமல்லவே.
அது அல்லாஹ்வின் தீன் வழங்குகின்ற ஒரு தீர்ப்பு.
இந்தத் தீர்ப்பை பல லட்ச ரூபாய்களுக்கு வழங்கும் அதிகாரத்தை இவர்கள் எப்படி பெற்றார்கள்?
பத்வாவை பல லட்ச ரூபாய்களுக்கு விற்க இஸ்லாம் இவர்களுக்கு அனுமதி அளிக்கின்றதா?
பணத்திற்கு விற்ற பத்வாவினால் ஏற்பட்ட விளைவு என்ன?
ஹராமான நிறுவனங்களை மேலோட்டமாக அவதானித்து பத்வா வழங்கி பணத்தை வாங்கி பெட்டியை நிறைப்பதால் யாருக்கு லாபம்?
விளைவு என்ன.....?
சுப்பர் மார்கட்களில் பன்றி இறைச்சிக்கு பக்கத்தில் கூட உலமா சபையின் பத்வா நோட்டீஸ் தொங்கிக் கொண்டிருக்கிறது.
பன்றி இறைச்சிக்கு பக்கத்தில் குந்தியிருக்கும் உலமா சபையின் ஹலால் பத்வாக்களைப் பார்த்து.... இப்போது பன்றி இறைச்சி மீதிருந்த வெறுப்பு முஸ்லிம்கள் மத்தியில் குன்றி வருகிறது.
பன்றி என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட தயங்கிய, கூச்சப்பட்ட, அருவறுப்பு பட்ட சமூகம் இன்று பன்றி இறைச்சிக்குப் பக்கத்தில் உள்ள கோழி இறைச்சியை எவ்வித சஞ்சலமும் படாமல் பிரச்சினை இல்லாமல் பலர்வாங்கிச் செல்வதை காணக் கூடியதாய் இருக்கிறது.
இந்த பாதகத்திற்கு காரணம் என்ன? பன்றி இறைச்சி விற்பனைக்கு பெயர் போன வெளிநாட்டு கம்பனிகளுக்கு உலமாசபை ஹலால் பத்வா வழங்கியதே.
ஊள்ளுர் கோழி இறைச்சி நிறுவனங்களுக்கும் பல்தேசிய நிறுவனங்களுக்கிடையில் இடையில் ஒரு போட்டியைக் கூட இது ஏற்படுத்தியது.
முஸ்லிம்களிடம் மாத்திரம் கோழி இறைச்சி வாங்கியவர்களை பல்தேசிய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மாற்றுமத நிறுவனங்களை நாட உலமா சபை உதவி செய்தது. தேசிய ரீதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கோழி இறைச்சி வர்த்தக நிறுவனங்களுக்கு கூட இதனால் பெரிய அடி விழுந்தது.
முஸ்லிம்களின் கடையில் இறைச்சி வாங்கி உண்டவர்களுக்கு, இல்லை இல்லை அந்நிய மத நிறுவனங்களிலும் இறைச்சி வாங்கி உண்ண முடியும் பிரச்சினையே இல்லை...என்ற ஒரு புதிய வழியை உலமா சபை காட்டிக் கொடுத்தது.
ஹராம் தொடர்பாக இறுக்கமாக இருந்த சமூகத்தின் மனநிலையை உலமா சபை இப்போது தளர்த்தியிருக்கிறது. இலகுவாக்கியிருக்கிறது.இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தேவையாய் இருந்த ஒன்றை உலமா சபை ஒழுங்காக நிறைவேற்றியிருக்கிறது.
உலமா சபை அவசரப்பட்டு ஹலால் பத்வா வழங்குவது பணத்தை அடிப்படைகாக் கொண்ட செயற்பாடு என்பதை அதன் நடவடிக்கைகள் நிரூபித்தக்கொண்டிருக்கின்றன.
சமூகத்தில் எத்தனையோ ஹராமான செயற்பாடுகள் மலிந்து கிடக்கின்றன. ஏன் அவற்றிற்கு உலமா சபையால் ஹராம் பத்வா வழங்க முடியாமல் இருக்கிறது.
மார்க்கத் தீர்ப்பு என்ற அடிப்படையில் பார்த்தால் அவர்கள் ஹராத்தையும், ஹலாலையும் மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பாக முன்வைக்க வேண்டும்?
உலமா சபையென்றால் ஹலால் பத்வா மட்டும் தானா வழங்க முடியும்?
ஏன் ஹராம் பத்வா வழங்க முடியாதா?
ஹலால் ஹராம் இரண்டைப்பற்றிய கட்டளையும் சமூகத்திற்கு சொல்லத்தானே வேண்டும்?
சூதாட்டம் ஹராம் தானே? எத்தனை முஸ்லிம்கள் போதிய அறிவோ கரிசனையோ இல்லாமல் பாதை நெடுகிலும் “சுவீப் ” டிக்கட்டுகளை வாங்கி சுரண்டிக்கொண்டிருக்கின்றார்கள்? எத்தனைப் பேர் புகைபிடிக்கின்றார்கள்? எத்தனைபேர் மதுபானம் அருந்துகின்றார்கள்?
சீதனம் பெண் இனத்திற்கே கொடுமை புரிகிறதே! சமுதாயம் மஹரை கொச்சைப்படுத்துகிறதே! ஏன் உலமா சபை இவற்றிற்கு ஒரு பத்வாவை வெளியிட்டு பள்ளிவாசல்களில் தொங்க விடக் கூடாது?
சமூகம் எத்தனை ஹராமான விடயங்களை செய்துகொண்டிருக்கிறது? ஒரு முஸ்லிம் எத்தனை ஹராமான விடயங்களோடு பின்னிப்பிணைந்திருக்கிறான். அவற்றை உலமா சபையால் பத்வாவாக வெளியிட முடியாதிருப்பதற்கு காரணம் ஹராம் பத்வாவிற்கு பணம் வழங்க இந்த சமூகத்தில் யாருமே இல்லாமல் இருப்பதுதானே!
மற்றும் ஹலால் பத்வா போன்றல்ல ஹராம் பத்வா பல நிறுவனங்களுக்கு நஷ்டத்தை உருவாக்கும். உலமாசபைக்கு அச்சுறுத்தல்கள் வரும் அதனால்தான் உலமா சபை ஹராம் விடயத்தில் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறது
உலமா சபை ஹராமுக்கும் பத்வா வழங்கவேண்டும்.
அந்த பத்வாவிற்குரிய பணத்தை பள்ளிவாசல் பள்ளிவாசலாய் பிச்சை எடுத்தாவது கொடுக்க முஸ்லிம் சமூகம் முன்வரவேண்டும்.
.
ஹலால் தீர்ப்பிற்கு பணம் கிடைக்கிறது. ஹராம் தீர்ப்பிற்கு பணம் கிடைப்பதில்லை. ஹலால் பத்வா வியாபார, லாபம் நோக்கம் கருதி உலமா சபையிடம் வேண்டப்படுகிறது.
ஹராம் பத்வாவை கேட்பதற்கு யாருமேயில்லை. ஹலால் பத்வாவை வைத்து உலமா சபையும் வர்த்தக நிறுவனங்களும் சேர்ந்து பணம் சம்பாதிக்கின்றன.
ஹராம் பத்வாவினால் வர்த்தக நிறுவனங்களுக்கு நஷ்டத்தைத் தவிர வேறு ஒன்றும் வந்துவிடப்போவதில்லை. இதனால் யாருக்கும் ஹராம் பத்வா தேவையே இல்லை.
அதனால் சமுதாயத்தில் மலிந்துள்ள ஹராமான விடயங்கள் பற்றி பத்வா வெளியிட உலமா சபை முயற்சிப்பதுமில்லை. அதற்கு தேவையுமில்லை.
இவ்வளவு பிரச்சினைகளுக்குள்ளும் சமூகத்தில் தோன்றிவரும் மோசமான எதிர் விளைவு நிலையை இந்த உலமா சபை புத்திஜீவிகள்(?) புரியாமல் இருக்கின்றனர்.
அமெரிக்க, இஸ்ரேலிய பொருட்களை பாவிப்பது ஹராம் என்று பத்வா வழங்கிய யூசுப் அல் கர்ழாவி அவர்களை மதிக்கின்ற பலர் உலமா சபையில் அங்கத்துவம் பெற்றிருக்கின்றார்கள்.
உலமா சபையால் பள்ளிவாசல்களில் தொங்க விடப்பட்டுள்ள ஹலால் பிரசுரத்தில் பெண்களின் அழகுசாதனப் பொருட்களான பல வர்ண லிப்ஸ்டிக், கியூடெக்ஸ் கூட அச்சிடப்பட்டிருக்கிறது. உலமா சபையின் பார்வையில் லிப்ஸ்டிக், கியூடெகஸ் ஹலாலாக இருந்தால் உலமா சபையினர் தமது மனைவி மக்களுக்கு முதலில் அறிமுகப்படுத்த வேண்டும்.
இதன் மூலம் உலமா சபை என்ன சொல்ல வருகிறது? லிப்ஸ்டிக், கியூடெக்ஸ் படம் ஹலால் போர்வையில் ஏன் தொங்க விடப்பட வேண்டும்? இது முஸ்லிம்கள் மத்தியில் அமெரிக்க கலாசாரத்தை மறைமுகமாக திணிப்பதற்கு அந்த கலாசாரத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியாக ஏன் இதை எம்மால் கொள்ளமுடியாது?
அண்மையில் அல்கஹோல் அடங்கிய ஒரு பொருளுக்கு உலமா சபை ஹலால் பத்வாவை வழங்கியிருக்கிறது.
ஹராத்தை ஹலாலாக்கும் அமெரிக்க சதிக்கே இன்று உலமா சபை துணைபோகிறது. பணத்திற்கு அது விலைபோகிறது என்ற உண்மையை சமூகம் உணர்ந்து வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்திய சதிகளுக்கும், நாசகார சக்திகளுக்கும் உதவியளிப்போர் யாராக இருந்தாலும் அவர்களை முஸ்லிம் சமூகம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்.
அல்லாஹ்வின் தீனை பாதுகாத்திட எல்லோரும் அணி திரள வேண்டும்.
அநியாயத்தைக் கண்டும் அமைதியாக, எடுத்துச் சொல்லாமல் இருப்பவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்...!

2 comments:

  1. Very interesting article and bitter truth..

    ReplyDelete
  2. muslim ummath eppathan thirunthumoooooooo?????????/

    ReplyDelete

இவ்வாக்கம் குறித்த உங்கள் கருத்தை பதியத் தவறாதீர்கள்

செய்திகள்