16.12.11

மனித வாழ்வும், பெருந்தன்மையின் முக்கியத்துவமும்.(தொடர் - 02)


அன்பின் சகோதரர்களே! மனித வாழ்வும் பெருந்தன்மையின் முக்கியத்துவமும். என்ற இந்தத் தொடர் ஆக்கம் எனது நண்பர் சகோதரர் மனாஸ் அவர்களினால் எழுதப்படுகிறது. பெருந்தன்மை தொடர்பாக இஸ்லாம் சொல்லும் செய்திகள் என்ன? பெருந்தன்மையினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றிய செய்திகளையெல்லாம் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் மூலம் கட்டுரையாளர் அழகாகத் தெளிவுபடுத்துகிறார். தொடர்ந்து படியுங்கள் உங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பதியுங்கள்.

இறைத்தூதர்களின் பெருந்தன்மை.

ஈஸா (அலை) அவர்களின் பெருந்தன்மை.

ஈஸா (அலை) அவர்களுக்கு அவர்களின் சமுதாயத்தவர்கள் அவர்களைக் கொலை செய்வதற்கு எண்ணினார்கள். அதுமாத்திரமல்லாமல் அவர்களுக்கு பல கொடுமைகளையும் செய்து, அவர்களை அல்லாஹ்வின் இடத்துக்கு கொண்டு சென்று, அவர்கள் மீது இட்டுக்கட்டி, அவருடைய தாயாரை விபச்சாரி என்று பட்டம் சூட்டியும் கூட அவர்கள் அந்த மக்களை மன்னித்து பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்கள் அவர்கள் அந்த மக்களுக்காக அல்லாஹ்விடம் மன்னித்து விடுமாறு வேண்டினார்கள். இதை அல்லாஹ் திருமறைக்குர்ஆனில் பின்வருமாறு கூறிக்காட்டுகிறான். 

"நீ எனக்குக் கட்டளையிட்ட படி "எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!' என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட் களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்.) (அல்குர்ஆன்; 5:117- 118)

மூஸா (அலை) அவர்களின் பெருந்தன்மை.

மூஸா (அலை) அவர்கள் சமுதாயத்தவர்கள் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்ததைப் போன்று உலகில் யாரும் மாறு செய்யவில்லை அதே போன்று அதிகமாக கருத்து முரண்பாடு கொண்டதும் இந்த பனூஇஸ்ரவேலர்கள் தான். மூஸா (அலை) அவர்களுக்கு சொல்லொனா துன்பத்தைக் அவர்கள் கொடுத்தும் கூட அவர்கள் அந்த மக்களை பெருந்தன்மையுடன் மன்னித்து  அல்லாஹ்விடம் பிராத்தனையும் செய்தார்கள் திருமறைக்குர்ஆனில் இவ்வாறு அல்லாஹ் கூறுகிறான். 

நாம் நிர்ணயித்த இடத்தில் மூஸா தமது சமுதாயத்தில் எழுபது ஆண்களைத் தேர்வு செய்தார். அவர்களைப் பூகம்பம் தாக்கிய போது "என் இறைவா! நீ நாடியிருந்தால் (இதற்கு) முன்பே அவர் களையும் என்னையும் அழித்திருப்பாய். எங்களில் மூடர்கள் செய்ததற்காக எங்களை அழிக்கிறாயா? இது உன் சோதனை தவிர வேறில்லை. இதன் மூலம் நீ நாடியோரை வழி கேட்டில் விட்டு விடுகிறாய். நீ நாடியோருக்கு வழி காட்டுகிறாய். நீயே எங்கள் பொறுப்பாளன். எனவே எங்களை மன்னித்து, எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே மன்னிப்போரில் சிறந்தவன்'' என்று (மூஸா) பிரார்த்தித்தார். (அல்குர்ஆன். 7:155)

இறைத்தூதர்களில் ஒருவரின் பெருந்தன்மை.

 (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத் துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. "அந்த இறைத் தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்து விட்டார்கள். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, "இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்துவிடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக் கிறார்கள்' என்று சொல்-க் கொண்டிருந் தார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ஆதாரம் புகாரி (3477)


 இறைத்தூதர் ஒருவர் அவருடைய சமுதாய மக்களால் தாக்கப்பட்டு இரத்தம் முகத்தில் வடிந்து கொண்டிருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் மனிதர்களாகி நாம் இருப்போமானால் மனதில் கங்கணம் கட்டிக் கொண்டு பழிவாங்கத் துடித்துக் கொண்டிடருப்போம். ஆனால் அந்த இறைத்தூதர் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் என்னுடைய சமுதாயத்தை மன்னித்துவிடு அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள். என்று அவர்களை அவரும் மன்னித்து அல்லாஹ்விடமும் மன்னிப்பை கேட்டார்கள். இந்த அளவுக்கு இறைத்தூதர்கள் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் கூட அவர்கள் அல்லாஹ்வுக்காக பெருந்தன்மையோடு நடந்துள்ளார்கள். 


பனூ இஸ்ரவேலர்களில் இருவரின் பெருந்தன்மை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பனூ இஸ்ராயீலில்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், "என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், "நிலத்தை, அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், "உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?'' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், "எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று சொன்னார். மற்றொருவர், "எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது'' என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், "அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள்;  தான தர்மம் செய்யுங்கள்'' என்று தீர்ப்பளித்தார். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஆதாரம் புகாரி (3472)

இன்று நிலத்துக்காக சண்டையிடக்கூடிய பலர்களைப் பார்க்கிறோம்.ஆனால் இந்த இரண்டு மனிதர்களின் பெருந்தன்மையைப் பார்க்கும் போது இப்படியும் அந்தக் காலத்தில் மனிதர்கள் வாழ்ந்துள்ளார்களா? என்று மூக்கின் மீது கையை வைத்து சிந்தனை செய்ய வேண்டியுள்ளது.

நிலத்தை வாங்கியவர் நான் நிலத்தைத்தான் வாங்கினேன் அதில் உள்ள இந்த தங்கம் நிரம்பிய ஜாடியை வாங்க வில்லை என்கிறார்.நிலத்தை விற்றவரோ நிலத்துடன் சேர்த்து அதில் உள்ளவைகள் அனைத்தையும் தான் விற்றேன். என்கிறார். இப்படி இன்று பார்க்க முடிகிறதா? இதுதான் கிடைத்த சந்தர்ப்பம் என்றெண்ணி எல்லாவற்றையும் வாங்கியது மாத்திரமல்லாம் இவன் இருந்தால் நமக்கு ஆபத்து என்று நினைத்து அந்த மனிதனையே கொலைசெய்து விடும் நிலையை இன்று நாளேடுகளிலும் தொலைக் காட்சிகளிலும் தினம்தினம் கண்டு வருகிறோம் இதோ அந்த நல்ல மனிதர்களின் சம்பவம் படிப்பினைக்கு மாத்திரமல்லாமல் மனிதநேயத்தையும் நமக்கு இந்த சத்திய மார்க்கம் கற்றுத் தருகிறது.


அஷ்அரி குலத்தாரின் பெருந்தன்மை.

இந்த உலகம் எத்தனையோ குலங்களையும் கோத்திரங்களையும் சமயங்களையும் சமுதாய அமைப்புக்களையும் இது நாள் வரையும் கண்டு வந்துள்ளது. ஆனால் இஸ்லாத்தைக் கண்டும் காணாதது போன்று இந்த உலகில் வாழும் பெரும்பான்மையான இனத்தவர்களும் மதத்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எவரிடமும் காணப்படாத அளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் விட்டுக் கொடுப்பும் பெருந்தன்மையும் ஏராளமாக காணப்படுகிறது. நபி மார்கள் முதல் அவர்களுடைய தொண்டர்கள் அவர்களை இது நாள் வரையும் பின்பற்றுபவர்களிடமும் காணப்படுகிறது. பெருந்தன்மை என்றால் இஸ்லாத்தில் தான் என்பதற்கு இப்போது மேலும் ஒரு சான்றுகளை நாம் பார்ப்போம். 

இதனால் தான் திருமறைக்குர்ஆன் நபிகளாரின் அருமைத் தோழர்கள் பெருந்தன்மையை சிலாகித்துக் இவ்வாறு கூறுகிறது. 

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக் கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர் களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்:59:09)

இப்படியும் பெருந்தன்மையா என்று நானும் நீங்களும் இந்த உலகமும் இன்று வரை கண்டுள்ளதா? என்பதை இந்த செய்தியைப் பாருங்கள்  .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய் விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்.
அறிவிப்பவர்: அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் , ஆதாரம் புகாரி:2486  

பெருந்தன்மைக்கு இஸ்லாத்தை விட எந்த ஒரு மார்க்கத்தையும் காணமுடியாது.  அந்த அளவுக்கு எந்த செயலை எடுத்துக் கொண்டாலும் அதில் பெருந்தன்மைக்கு இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அது ஒரு மனிதனுககு அத்தியவசியமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெருந்தன்மையோடு இஸ்லாம் அவர்களையும் அதில் ஒன்றினைத்து தேவையுடைவர்களுக்கு கொடுத்து அவர்களின் தேவைகளையும் நமது தேவையாக நினைத்து நடந்து கொள்ளும் படி கட்டளையிடுகிறது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமாகும். இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) அவர்கள் , ஆதாரம் புகாரி:5392 

இதனால் தான் இஸ்லாம் அடுத்தவர்களின் துன்பங்களிலும் கஷ்டங்களிலும் உன்னுடைய பங்களிப்பையும் அவர்களுக்கு கொடுத்து அவர்களின் கஷ்டங்களை நீக்க பாடுபட வேண்டும் என்று நமக்கு கட்டளையிடுகிறது. அது மாத்திரமல்லாமல் இப்படி யார் இவர்களின் கஷ்டங்களையும் சிரமங்களையும் போக்குவோருக்கு பல விதமான சிறப்புக்களை திருமறைக் குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் பென் மொழிகளும் நமக்கு கட்டளையிடுகின்றன.

கடன் கொடுத்து அதனை திருப்பி தரமுடியாதவர்களிடம் அதனை அல்லாஹ்வுக்காக அவனின் தருப்பதியை நாடி அந்தக் கடனை தள்ளுபடி செய்து விடுவதும் பெருந்தன்மைதான். 

கடன் பற்றி திருமறைக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. 

அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 2:245)

"அல்லாஹ்வுக்கு அழகிய கடன் வழங்குதல்'' என்றால் அல்லாஹ்வுக்கு கொடுப்பது அல்ல மாற்றமாக தேவையுடைய மனிதர்களுக்கு வழங்குவே இது குறிக்கிறது. அல்லாஹ்வுக்கு கடன் கொடுப்பது என்று கூறி அதனை ஏழை எளியோருக்கும் தேவையுடையோருக்கும் அல்லாஹ் கொடுக்கும் படி கட்டளையிடுகிறான். அழகிய கடன் கொடுத்தால் அது கூட ஒரு வகையில் பெருந்தன்மையாகும். 

இதற்கு சான்றாக நபி (ஸல்) அவர்கள் முன்னோரு காலத்து மனிதரைப் பற்றி கூறிப்பிடும் போது அவர் மனிதர்களுக்கு கடன் கொடுத்து அந்தக் கடனை அந்த மனிதரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லையென்றால். அவரைக் கஷ்டப்படுத்தாமல் அவருக்கு நோவினை செய்யாமல் கெட்ட வார்த்தையால் திட்டாமல் அல்லாஹ்வும் நம் விசயத்தில் பெருந்தன்மையாக நடப்பான் என்றெண்ணி அந்தக் கடனை தள்ளுபடி செய்தார் அதனால் அல்லாஹ்வும் அவருடன் பெருந்தன்மையாக நடந்து கொண்டான். இப்படிப் பட்டவர்களாக நாமும் மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும். கடனாளியிடம்  பெருந்தன்மையாக நடந்தார் அல்லாஹ்வும் அவருடன் பெருந்தன்மையாக நடந்து கொண்டான்.

 (முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தனது (அலுவலரான) வாலிபரிடம், "(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும்'' என்று சொல்-வந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்த போது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) , ஆதாரம் புகாரி:3480

வளரும் இன்ஷா அல்லாஹ்...............

No comments:

Post a Comment

இவ்வாக்கம் குறித்த உங்கள் கருத்தை பதியத் தவறாதீர்கள்

செய்திகள்